இதுவும் காதலே

கிடைக்காத ஒன்றின் மீதே இந்த மனது ஆசை வைக்கும் என்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை. என் ஆசை இன்னும் சற்று ஆழமானது , கண்களுக்கு எட்டியது கைகளுக்கு எட்டாது போனால் அதன் வேதனை சொல்லில் அடங்காது. என்ன பிழை செய்துவிட்டேன் என்று தெரியவில்லை இந்த இயற்கை என்னை ஏனோ ஒதுக்கி விட்டது... பள்ளி விட்டு வீடு திரும்புகையில் ஒரு நாள் மழையில் நினைந்தேன் , அதன் பின் இன்றுவரை எந்த மழையும் என்னை தீண்டியதில்லை , செயற்கையின் சிறையில் , ஓர் தனி அறையில் , அடைபட்டு கிடக்கும் என்னை தேடி வரும் அடைமழையின் ஓசை இயற்கையின் ஒப்பாரியாகவே ஒலிக்கிறது இன்றும் என் ஜன்னல் ஓரத்தில் . பல் துலக்கும் இடத்திலிருந்து பத்து அடி தள்ளி பளிச்சென்று பூத்து என்னை பார்த்து சிரிக்கும் பூவின் மென்மையை உணர ஆசை பட்டு இன்றுவரை ஏக்கமாகவே எஞ்சி இருக்கிறது என்னுள் , எல்லோருக்கும் குறிஞ்சி மலர் அதிசயம் ஆனால் தினம் பூத்து தினம் உதிரும் மலரோடு உதிர்ந்த பூவும், உலர்ந்த இதழ்களும் கூட எனக்கு அதிசயமே . விவரம் தெரிந்த அன்று முதல் இன்னும் என் பாதங்கள் பூமா...