பாண்டித்துரைத் தேவர் எரித்த திருக்குறள்
திருக்குறள் சுகாத்தியர் உரை என்பது T.M. Scott என்ற மேல்நாட்டு கிறித்தவ மறைபரப்பாளர் தம் பெயரை “சுகாத்தியர்” என்று தமிழ்வடிவமாக்கி, அப்பெயரில் திருக்குறளுக்கு உரை எழுதி 1889இல் வெளியிட்ட நூலைக் குறிக்கும். இந்த உரையின் முழுப்பெயர் திருவள்ளுவ நாயனார் அருளிச்செய்த குறள் மூலமும் சுகாத்தியர் இயற்றிய கருத்துரயட்டவணையும் பொழிப்புரயும் என்பதாகும். இதை லாறன்சு பிர்ஸ், சென்னை வெளியிட்டது.
சுகாத்தியர் தமிழ் இலக்கிய இலக்கணங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் சுவிசேட புராணம் என்னும் கிறித்தவக் காப்பியத்தைத் தமிழில் உருவாக்கினார். ஔவையார் எழுதிய “மூதுரை” என்னும் நூலை இவர் பதிப்பித்து, அதற்கு ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியிட்டார். சென்னை வேப்பேரியில் அந்நூல் 1860இல் வெளியானது.
“வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்” எனத் தொடங்கி முப்பது பாக்களால் ஆன மூதுரை நூலில் காணப்படும் அறநெறிக் கருத்துகளை சுகாத்தியர் போற்றுகின்றார்.
சுகாத்தியர் திருக்குறளுக்கு எழுதிய உரையின் நிறைகுறைகள்திருக்குறளுக்கு பழைய உரையாசிரியர்கள் எழுதிய உரைகளுக்குப் பிறகு பெருமளவில் மாற்றங்களைப் புகுத்தி உரை எழுதிய முதல் அறிஞர் சுகாத்தியர் ஆவார்.
]இவர் பதித்த திருக்குறள் பதிப்பு சில தனித்தன்மைகள் கொண்டது. அதில் “ஐ” என்னும் எழுத்தை சுகாத்தியர் “அய்” என்று எழுதினார். முப்புள்ளியை அடுத்து வருகின்ற தனி மெய்யெழுத்தை இரட்டை மெய்யெழுத்தாக எழுதினார். மேலும் பல புதுமைகளைப் புகுத்தினார். மூல பாடத்தைத் தம் விருப்பத்துக்கு ஏற்ப திருத்தியதாகத் தெரிகிறது. வழக்கமான பதிப்புகளுக்கும் இப்பதிப்புக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. – இவ்வாறு L.D. Barnett என்பவர் குறிப்பிடுகிறார்.
சுகாத்தியர் புகுத்திய மாற்றங்கள்
திருக்குறளின் மூல பாடத்தைப் பதித்து, அதற்கு உரை எழுதிய சுகாத்தியர் என்னென்ன மாற்றங்களைப் புகுத்தினார் என்பதை முனைவர் கு. மோகனராசு விரிவாக விளக்கியுள்ளார். அவரது ஆய்வு முடிவுகள் கீழே தொகுத்துத் தரப்படுகின்றன.
சுகாத்தியர் திருக்குறளில் வரும் பால், இயல், அதிகாரம் ஆகிய அமைப்புகளை முற்றிலுமாக மாற்றித் தாம் ஒரு புதிய முறையில் அமைத்து, உரை கண்டுள்ளார். எதுகை மோனை என்பவற்றில் பெரும் நாட்டம் கொண்ட இவர், தாம் கருதும் எதுகை மோனை அமைவுக்காகக் குறள்களில் வரும் சொற்கள் பலவற்றையும் மாற்றி அமைத்துத் தாம் அமைத்த பாடங்களுக்குத் தக உரையும் வழங்கியுள்ளார்.
பாயிரத்தை மாற்றுதல்
திருக்குறளின் முதல் நான்கு அதிகாரங்கள் “பாயிரம்” என்னும் தலைப்பில் அறத்துப்பாலோடு சேர்ந்து அமைவது மரபு. சுகாத்தியர், பாயிரத்தை அறத்துப்பாலிலிருந்து தனியே பிரிக்கிறார். அதற்கு “நூன்முகம்” என்று மறுபெயர் இடுகிறார். பாயிரத்தின் அதிகாரப் பெயர்களைக் கீழ்வருமாறு மாற்றுகின்றார்:
வழக்கமான அதிகாரப் பெயர்
சுகாத்தியர் அளித்த மாற்றுப் பெயர்
கடவுள் வாழ்த்து
முதற்பொருள் வாழ்த்து
வான்சிறப்பு
மழைத்துணை வாழ்த்து
நீத்தார் பெருமை
துறவுரன் வாழ்த்து
அறன்வலியுறுத்தல்
அறமுறை வாழ்த்து
இந்த நான்கு அதிகாரங்களும் முறையே ஆணவ மல நீக்கம், மாயா மல நீக்கம், காமிய மல நீக்கம், அறத்தின் ஊக்கம் ஆகியன கூறுவதாகக் கொள்கிறார்.
திருக்குறளைப் பிரித்தல்
மேலே கூறிய நான்கு அதிகாரங்களையும் தனிப்படுத்திய பின், திருக்குறளின் எஞ்சிய 129 அதிகாரங்களை சுகாத்தியர் மூன்று சம பங்குகள் ஆக்குகின்றார். இவ்வாறு ஒவ்வொரு பிரிவிலும் 43 அதிகாரங்களை அமைக்கிறார். அந்த மூன்று பிரிவுகளுக்கும் புதிய பெயர்கள் வழங்குகின்றார்:
•இயன் முறைப் பால்
•இயை முறைப் பால்
•இறை முறைப் பால்
பால் பகுப்பில் பெயர் மாற்றங்கள் மட்டுமல்ல,
அவற்றிற்குரிய அதிகாரங்களின் உள்ளடக்கங்களையும் மாற்றி அமைத்துக் கொள்கிறார்.
இயன் முறைப் பால் என்னும் முதற்பிரிவில், மரபு வழியாக வரும் இல்லறவியல் (இரண்டு அதிகாரங்கள் நீங்கலாக), காமத்துப்பால் குறட்பாக்களை உள்ளடக்கமாக்கிக் கொண்டுள்ளார். பொருட்பால், துறவறவியல், இல்லறவியலில் வரும் இரண்டு அதிகாரங்கள் ஆகியவற்றை ஒன்றாக்கி ஒவ்வொன்றும் 43 அதிகாரங்கள் வருமாறு இயை முறைப் பால், இறை முறைப் பால் என இரண்டு பிரிவுகளாக்கிக் கொள்கிறார். அதிகாரத்திற்குப் பதிகம் எனப் பெயர் அமைத்துக் கொண்டுள்ளார்.
விந்தையான பால் பகுப்பு முறை
சுகாத்தியர் திருக்குறளின் பால் பகுப்பு முறைகளைப் பெருமளவு மாற்றியுள்ளார்:
•ஒவ்வொரு பாலையும் மூன்று ஆண்மைகளாகப் பிரித்துக் கொண்டுள்ளார்.
•ஒவ்வோர் ஆண்மையையும் மூன்று மூன்று இயல்களாகப் பிரித்துக் கொண்டுள்ளார்.
•ஒவ்வோர் இயலையும் மூன்று மூன்று உடைமைகளாகப் பிரித்துக் கொண்டுள்ளார்.
•ஒவ்வோர் ஆண்மைப் பகுப்பின் முடிவிலும் அந்தந்த ஆண்மையின் பயன் என ஒரு பிரிவையும் அமைத்துக் கொண்டுள்ளார்.
சுகாத்தியர் திருக்குறளின் பால் முறை அமைப்பிலும், அதிகாரப் பெயர் மாற்றத்திலும் எத்துணை ஈடுபாடு காட்டினார் என்பதைப் பின்வரும் அட்டவணை தெளிவாக்கும்:
திருக்குறளில் வரும் மரபுப் பெயர்
சுகாத்தியர் தரும் புதுப் பெயர்
பாயிரம்
கடவுள் வாழ்த்து
வான்சிறப்பு
நீத்தார் பெருமை
அறன்வலியுறுத்தல்
நூன்முகம்
முதற்பொருள் வாழ்த்து
மழைத்துணை வாழ்த்து
துறவுரன் வாழ்த்து
அறமுறை வாழ்த்து
இல்வாழ்க்கை
வாழ்க்கைத்துணை நலம்
மக்கட் பேறு
அன்புடைமை
விருந்தோம்பல்
இனியவை கூறல்
செய்ந்நன்றி அறிதல்
நடுவுநிலைமை
அடக்கம் உடைமை
ஒழுக்கம் உடைமை
பிறனில் விழையாமை
பொறை உடைமை
அழுக்காறாமை
வெஃகாமை
புறங்கூறாமை
இயன்முறைப்பால்
பேறாண்மை வகை
* நோற்பியல்
தளிர்வுடைமை
விருந்துடைமை
அளவுடைமை
* சால்பியல்
நடுவுடைமை
அடக்குடைமை
ஒழுக்குடைமை
* நோக்கியல்
பொறயுடைமை
கெழுவுடைமை
விறலுடைமை
பேறாண்மைப் பயன்
பயனில சொல்லாமை
தீவினை அச்சம்
ஒப்புரவு அறிதல்
தகையணங்குறுத்தல்
குறிப்பறிதல்
புணர்ச்சி மகிழ்தல்
நலம்புனைந்துரைத்தல்
காதல் சிறப்பு உரைத்தல்
நாணுத் துறவு உரைத்தல்
அலர் அறிவுறுத்தல்
பிரிவு ஆற்றாமை
படர் மெலிந்து இரங்கல்
கண்விதுப்பு அழிதல்
பசப்புறு பருவரல்
ஆய்வாண்மை வகை
சூழ்வியல்
உரவுடைமை
மகிழ்வுடைமை
நகையுடைமை
* பீடியல்
மதியுடைமை
பணிவுடைமை
மடலுடைமை
* ஊரியல்
பிரிவுடைமை
துணைவுடைமை
பரிவுடைமை
ஆய்வாண்மைப் பயன்
தனிப்படர் மிகுதி
நினைந்தவர் புலம்பல்
கனவுநிலை உரைத்தல்
பொழுதுகண்டு இரங்கல்
உறுப்பு நலன் அழிதல்
நெஞ்சொடு கிளத்தல்
நிறை அழிதல்
அவர்வயின் விதும்பல்
குறிப்பு அறிவுறுத்தல்
புணர்ச்சி மகிழ்தல்
நெஞ்சொடு புலத்தல்
புலவி
புலவி நுணுக்கம்
ஊடல் உவகை
வீழ்வாண்மை வகை
காமியல்
நனவுடைமை
மலர்வுடைமை
கவினுடைமை
* ஏமியல்
நிறையுடைமை
நசையுடைமை
திகழ்வுடைமை
* பேணியல்
நினைவுடைமை
புணர்வுடைமை
உணர்வுடைமை
வீழ்வாண்மைப் பயன்
இப்பட்டியலில் காட்டியவாறே மற்ற இரண்டு பால்களும் அமைகின்றன. மரபுப்படியான அதிகாரப் பெயர்களுள் ஓரிரு தலைப்புகள் தவிர ஏனைய தலைப்புகள் அனைத்தையும் சுகாத்தியர் மாற்றி அமைத்துள்ளார். அவற்றுள் ஒரு சில தலைப்புகள் எண்ணிப் பார்க்கத் தக்கனவாக உள்ளன.
எடுத்துக்காட்டாக:
மரபு வழி அதிகாரத் தலைப்பு
சுகாத்தியர் தரும் மாற்றுத் தலைப்பு
நாணுத் துறவு உரைத்தல்
மடலுடைமை
புலவி
புணர்வுடைமை
கள்ளுண்ணாமை
களியுடைமை
பெருமை
சிறப்புடைமை
உழவு
ஏரியல்
சுகாத்தியர் தருகின்ற சில புதிய தலைப்புகள் எதிர்ப்பொருள் தருவனவாக உள்ளன.
எடுத்துக்காட்டாக,
•உறுப்பு நலன் அழிதல் என்பது “கவினுடைமை” என்றும்
•உட்பகை என்பது “உறவுடைமை” என்றும்
•நல்குரவு என்பது “வரவுடைமை” என்றும் மாற்றப்பட்டுள்ளன.
பெரும்பாலும் அதிகாரங்களுக்குப் பெயரிடும்போது, அந்த அதிகாரத்தில் வரும் ஒரு சொல்லை அடிப்படையாகக் கொண்டே பெயரிடுகின்றார் சுகாத்தியர் என்பது கருதத்தக்கது.
எதுகை மோனை அடிப்படையில் குறள் மாற்றங்கள்
சுகாத்தியர் பல குறள்களை எதுகை மோனை கருதி மாற்றியுள்ளார்.
சில எடுத்துக்காட்டுகள்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்னும் குறள் (குறள்: 1) சுகாத்தியர் நூலில்,
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
முகர முதற்றே உலகு
என்று திருத்தப்பட்டுள்ளது.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
என்னும் குறள் (குறள்: 69) சுகாத்தியர் நூலில்,
போன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனய்ச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
என்று திருத்தப்பட்டுள்ளது.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு
என்னும் குறள் (குறள்: 786) சுகாத்தியர் நூலில்,
நெகநக நட்பது நட்பன்று நெஞ்சம்
நகநக நட்பது நட்பு
என்று திருத்தப்பட்டுள்ளது.
எதுகை மோனை மாற்றங்களுக்குக் காரணம்
சுகாத்தியர் திருக்குறளின் பாடத்தைத் திருத்தியது பெருந்தவறு என்பது தெளிவு. பண்டைய இலக்கியமான திருக்குறள் தமிழ் மக்களால் மட்டுமன்றி உலக அளவிலேயே மாண்புடைய நூலாகப் போற்றப்படுவது. அதன் பாடத்தைத் திருத்த வேண்டும் என்றால் அதற்குப் போதிய சுவடி ஆதாரம் வேண்டும். பண்டைய உரையாசிரியர்களின் பாட வேறுபாடுகள் அறியப்பட வேண்டும். அவற்றின் அடிப்படையில் பாடத்திற்கு மாற்று பாடம் தர வேண்டும் என்றால் அறிஞர் உலகம் அதை ஏற்கும் வகையில் அது ஆதாரத்தோடு நிறுவப்படவும் வேண்டும். சுகாத்தியர் இது பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
மேலும், எதுகை மோனை என்பது தமிழ் இலக்கியத்தில் எழுத்துக்கு எழுத்து பொருத்தமாக இருக்கவேண்டும் என்ற வகையில் தொகுக்கப்படுவதில்லை. மாறாக, ஓசை நயம், பொருள் நயம் போன்றவற்றிற்கு முதலிடம் கொடுப்பதே மரபு. ஆனால் சுகாத்தியர் எதுகை மோனை அமைப்பில் நேருக்கு நேர் பொருத்தம் ஏற்படுத்த எண்ணியதோடு, தம் மனம் போன போக்கில், சுவடி ஆதாரமின்றி, திருக்குறளைத் திருத்தியது ஏற்புடையதன்று.
பாண்டித்துரைத் தேவர் சுகாத்தியர் நூலை எரித்தது
சுகாத்தியர் உருவாக்கிய திருக்குறள் உரை பரவினால் மக்களிடையே குழப்பம் தான் மிகும், திருக்குறளின் மதிப்பும் கெடும் எனக் கருதிய பாண்டித்துரைத் தேவர், மற்றவர்கள் பார்வைக்குச் சென்ற சுமார் 200 நூல்களைத் தவிர்த்து, எஞ்சிய 300 சுகாத்தியர் பதிப்புகள் அனைத்தையும் விலை கொடுத்து வாங்கி அவை அனைத்தையும் தீயிட்டு எரித்ததாக வரலாறு.
ஆதாரம்
1.Jump up ↑ இர. ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் – 613006).
2.Jump up ↑ திருக்குறள் மாமுனிவர் முனைவர் கு. மோகனராசு, திருக்குறள் உரை வகைகள், மணிவாசகர் பதிப்பகம், 31 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600108, 2005, பக். 62.
3.Jump up ↑ L.D. Barnett and G.U. Pope (compilers), A Catalogue of the Tamil Books in the Library of the British Museum, London, 1909, p. 384: “This edition is peculiar in writing அய் for ஐ throughout, a double consonant for a single consonant preccded by the ” muppulli” and other innovations. The text has apparently been emended with great freedom, and differs considerably from, that of the current editions.” இணையதள வெளி இணைப்பு
4.Jump up ↑ திருக்குறள் மாமுனிவர் முனைவர் கு. மோகனராசு, முறை மாறிய திருக்குறள் உரைகள், மணிவாசகர் பதிப்பகம், 31 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 600108, 2005, பக். 22-27.
5.Jump up ↑ திருக்குறள் மாமுனிவர் முனைவர் கு. மோகனராசு, மேற்குறிப்பு, பக். 27.
தமிழ் விக்கிப்பீடியா
சரவணன், தமிழ்ப் பேராசிரியர், கரூர்.
நன்றி : http://tamilspeak.com/
Comments
Post a Comment