ஜோ'வென பெய்த முதல் மழை
நமது சந்திப்பு ஏற்கனவே நிகழ்ந்திருந்த போதும் நிஜம்தானா என்று எண்ணி பார்ப்பதற்கு முன்பாக முடிந்துவிட்ட கனவின் காலத்தை ஒத்திருந்தது அந்த நேரம் என்றுதான் சொல்ல வேண்டும். சம்பிரதாயமான அறிமுகம், சில நொடிகள் பேச்சு சொல்லப்போனால் சிந்தித்துப் பார்க்கையில் ஒரு சில கண் சிமிட்டல்களுக்குள் அடங்கிவிடக் கூடிய சின்ன அளவு கனவு அது... அந்த தருணத்தை அன்றிரவு நான் சிந்தித்துப் பார்க்கையில் இப்படி யோசித்தது உண்டு அதன்பின்னான நாட்களில் சந்திக்க வேண்டும் என்கிற பேராவல் தூண்டும் தருணங்களில் எல்லாம் வாய்ப்புகள் அமையாத போதிலும் வானம் பார்த்த பூமிக்கு ஆறுதலாய் அவ்வப்போது காற்றில் சாரல் எங்கிருந்தோ தொற்றிக்கொண்டு வருமே அதுபோல அந்த நினைவுகள் ஒருபோதும் புன்னகை பூக்கச் செய்வதில் பொய்த்ததே இல்லை. இதோ இனி எல்லாம் நிஜம்... கனவு கண்ட கனவே ஆசைகொண்ட ஆவல் ததும்பும் நாள்..! நாம் இருவரும் நம் இருவரோடு நிறையா பேசி, நிறைய நிறைய விவாதித்து, ஒன்றாய் உணவருந்தி, ஓவென சிரித்து பேசி, புத்தகம் வாசித்து, பொன்னொளி வீசும் மாலை பொழுதில் கொஞ்சம் காலாற காற்றாட ஒரு பட்டாம்ப்பூச்சி கூட்டம்போல தெருக்களில் உலவித்திரிந்து, ...